NEWS

Tuesday, March 5, 2013

மழையின் நினைவுகள்..

பகலை இரவென மேகங்கள் வடிகட்டும்
ஓர் மழைக்கால மாலை..

தோட்டத்துச் செடிகளில்
இலையைக் கழுவிச் செல்லும் நீர்த்துளிகள்
மண்ணில் இறங்கி புதிய மணத்தை பரப்பும்..

பரணிலிருந்து வழியும் மழைத்துளிகள்
சுவர்களின் பரப்பில்
நீர்வரிகளை எழுதிச் செல்லும்..

பாத்திரங்கள் நிறைந்து பெருகும் நீரின் ஓசையுடன்
எங்கிருந்தோ கசிந்து கொண்டிருக்கும்
சுகமாய் ஒரு பாடலோசையும்..

குளிர்காற்று ஆடை வழியே உட்புகுந்து
உடலோடு உயிரையும் சிலிர்க்கச் செய்யும்..

சன்னலோரங்களில் பட்டு சிதறும் நீர்த்துளிகள்
முகத்தில் மோதி
கண்ணீரோடு கலந்து இறங்கும்..

குளிர்ந்த என் உள்ளங்கைகள்
எப்போதும் போல காத்திருக்கும்..

உன் உள்ளங்கை கதகதப்புக்காக..

No comments: